அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, October 12, 2010

சிந்திப்போம், சீர்பெறுவோம்!

''அற்புதம்'' இந்த சொல்லை சொல்லும்பொதே உற்சாகம் கொப்பளிக்கும்.ஆம்! அபூர்வமான ஒன்றை, கற்பனைக்கெட்டாத ஒன்றை, தனது சக்திக்கு மேலான ஒன்றை, பிரமிப்பான ஒன்றை காணும்பொழுது, இதுவரை அனுபவித்திராத ஒன்றை அனுபவிக்கும்போது மனிதனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொல்லே இது என்று சொன்னால்; எவரேனும் மறுக்கப் போகிறீர்களா என்ன!
அற்புதத்தை பட்டியலிடச்சொன்னால் பலருக்கும் தாஜ்மஹலும், பிரமிடுகளும், சைனா சுவரும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் இவையெல்லாவற்றையும்விட ஒப்புயர்வற்ற அற்புதம் ஒன்று உள்ளது. அதற்கு நிகரான ஒரு அற்புதம் இந்த பிரபஞ்சம் முழுக்க தேடினாலும் கிடைக்காது, கிடையாது. ஏனெனில் அதற்கு இணையான ஒரு ''அற்புதம்'' எதுவுமே இல்லை.
ஒரு உண்மையான முஸ்லீமிடம் ''அது!'', ''எது?'' என்று கேட்டால் ''டக்''கென்று சரியான பதிலை சொல்லி விடுவார். ஆம்! நீங்கள் நினைப்பது சரிதான். ஏனெனில் நீங்களும் ஒரு உண்மையான முஸ்லீம் அல்லவா!
ஆம்! இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும்;. அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.
ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.
திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;
''(நபியே!) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!'' (அல்குர்ஆன் 18:109)
''மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)
இந்த உலகத்தில் மாட மாளிகை கூட கோபுரத்தில் வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் 'கப்ருக்குள்' வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன் அல்லவா? சூரியனுக்கு 'கப்ருக்குள்' ஊடுருவிச்சென்று ஒளி தரும் ஆற்றல் கிடையாது. ஆனால் அந்த ஆற்றலை அல்லாஹ் திருக்குர் ஆனுக்கு வழங்கியுள்ளான். வாழும்போது வசதியாக வாழ்வதற்கான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கின்றோமே மரணத்திற்குப்பிறகு நாம் தங்கப்போகும் அந்த இருளடைந்த வீட்டை ஒளி பொருந்தியதாக ஆக்க இப்பொழுதே முயற்சி எடுக்க வேண்டாமா?
சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர், மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முன்னிலை நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, 'கப்ரில்' ஒளியாக வலம் வரும்' மேலும் சொன்னார்கள், 'கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை''. ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளது இந்த இறைவேதம்!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ''எவர் குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக என்னை திக்ர் செய்வதற்கும் என்னிடம் துஆ கேட்பதற்கும் நேரம் கிடைக்கவில்லையோ, அவருக்கு துஆ கேட்பவர்கள் அனைவருக்கும் கொடுப்பதைவிட அதிகமானதை நான் கொடுப்பேன் என்று அல்லாஹு தஆலா கூறுகின்றான்.' மேலும், 'மற்றெல்லா வசனங்களைவிட அல்லாஹுதஆலாவுடைய திருவசனத்தின் உயர்வு, அல்லாஹு தஆலா படைப்பினங்களைவிட எவ்வளவு உயர்வானவனாக இருக்கின்றானோ அவ்வளவு உயர்வானதாகும்.'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
திருக்குர்ஆனின் சில குறிப்பிட்ட சூராக்களை மட்டுமே ஓதுவதை வழக்கமாகக் கொள்ளாமல் முழு குர்ஆனையும் ஓதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அல்லாஹ்வின் அந்த அற்புத வார்த்தைகளை சரியாக சரளமாக ஓத முடியும். அப்படி திருக்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கு பயிற்சி எடுத்துப்பாருங்கள், அதன் இன்பத்திற்கு ஈடே கிடையாது. அதுவும் நீங்கள் ஓதுவதை அல்லாஹ் ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவுகூர்ந்து ஓதிப்பாருங்கள், உள்ளமெல்லாம் பூரிப்படையும், கண்களில் நீர் பெருக்கெடுக்கும் இந்த இறைமொழியை ஓதுவதற்கு பாக்கியமளித்த அந்த ஏக இறைவனை எண்ணி! அந்த இன்பத்தை சொல்லில் வடிக்க முடியாது.
ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
''அடியான் திருக்குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் ஆவலோடு கவனிப்பதுபோல் வேறு எதையும் கவனிப்பதில்லை. '' ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வே ஆவலோடு கவனிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மிஸ் பண்ணினால் எப்படி?! இதைவிட கைசேதம் வேறு என்னவாக இருக்க முடியும்? சிந்தியுங்கள்.
நாம் எவ்வளோ நல்ல காரியங்களை செய்கின்றோம்தான், நல்ல காரியங்கள் அனைத்திற்கும் நன்மை உண்டு என்பதும் உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் அல்லாஹ் ஆவலோடு கவனிக்கின்றான் என்று எதற்கும் சொல்லப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஓதப்படுவதை மட்டும்தான் அல்லாஹ் மிகவும் ஆவலோடு பார்ப்பதாக அறிய முடிகிறது.
கொஞ்ச நேரம் எல்லா அலுவல்களையும் மூட்டை கட்டி விட்டு அமைதியாக சிந்தனை செய்து பாருங்கள். முதலாளியிடம் வேலைபார்க்கும் தொழிலாளி, முதலாளியிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால் என்ன செய்வான்? அந்த முதலாளிக்கு எது ரொம்ப புடிக்குமோ அதற்குத் தகுந்த மாதிரிதான் இவனும் நடந்து கொள்வான். அப்போதுதான் முதலாளியின் கடைக்கண் பார்வையாவது தன் மீது விழும் என்று!
அதே சமயம் நாம் யார்? அல்லாஹ்வின் அடிமைகள். இந்த அடிமைகளின் ஒரு செயலை அந்த மாபெரும் எஜமானன் ஆவலோடு பார்க்கின்றான் என்றால் அந்த செயல் எவ்வளவு மகத்துவமிக்கதாக இருக்கும்! எண்ணிப்பார்க்க வேண்டாமா? வருடத்திற்கு ஒருமுறை நோன்பு காலங்களில் மட்டும் குர்ஆன் ஷரீஃபை திறப்பதும் மற்ற காலங்களில் அதை காட்சிப் பொருளாக வைத்திருப்பதும் தகுமா?
மனிதர்களாகிய நாம், வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் உதவியை தேவை உடையவர்களாகத்தான் இருக்கின்றோம். அவனது தயவுக்கு ஏங்கியவர்களாகத்தானே வாழ்கின்றோம்! அவனின்றி எதுவும் நடக்காது என்று நன்றாகத் தெரிந்துதானே வைத்திருக்கின்றோம்! அப்படியிருக்கும்போது அவனுக்கே ஆவலைத்தூண்டக்கூடிய செயலை (திருக்குர்ஆனை ஓதுவது) தினசரி வாழிவில் நடைமுறைப் படுத்துவதில் என்ன தயக்கம்! என்ன தடங்கல்!!
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாசீன், தபாரக் இன்னும் சில குறிப்பிட்ட சூராக்களை சரளமாக, ஏன் மனப்பாடமாகக்கூட ஓதத்தெரிந்த பலருக்கு குர்ஆனின் மற்ற சூராக்களை சரளமாக ஓதத் தெரியாது. காரணம் இந்த சூராக்களின் முக்கித்துவத்தை கருதி இதை மட்டுமே ஓதி மற்றவைகளை ஓதாமல் விட்டு விடுவதால்; அவைகளை ஓதும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. திருக்குர்ஆனின் ஒவ்வொரு சூராவும் தனித்தன்மை வாய்ந்ததுதான். உதாரணத்திற்கு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், யாஸீன் சூராவை திருக்குர்ஆனின் இதயமாகச் சொன்னார்கள். அவர்களே, திருக்குர்ஆனில் முப்பது வசனங்கள் கொண்ட ஒரு சூரா இருக்கிறது, அது ஒவ்வொரு முஃமினின் நெஞ்சத்திலும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதமாகவும் சொன்னார்கள்.
இதயம் என்பது உடம்பின் முக்கியமான பகுதி என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அதற்காக கண், காது, மூக்கு இவையெல்லாம் முக்கியமில்லை என்று அர்த்தமாகாது. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் மிக மிக முக்கியமானது தான். ஏன்! ஒரு சின்ன நரம்புகூட உயிரை போக்கக்கூடிய அளவுக்கு கொண்டு போய் விடக்கூடிய ஆற்றலை அல்லாஹ் அதற்குள் வைத்துள்ளான். ஆக ஒரு முழு உடம்பு இயங்குவதற்கு எப்படி அத்தனை பகுதியும் முக்கியமோ அதுபோல் திருக்குர்ஆனின் அத்தனை வசனமும்-ஏன் அத்தனை எழுத்துக்களும் முக்கிமானதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், '(ஓதுகின்றவர்க்கு) திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் எழுதப்படுகிறது, அலீஃப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்தாகும்.' சுப்ஹானல்லாஹ்! ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்றால் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் எவ்வளவு நன்மை என்பதை கணக்கிட்டுப் பாருங்களேன்!
திருக்குர்ஆன் ஓதுவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதை ஓதுவதின்; அவசியத்தைப் பற்றியும், இம்மையிலும் மறுமையிலும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியும் ஏராளமான ஹதீஸகள் உள்ளன. அவைகளையெல்லாம் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேலாக அதை தினசரி ஓதுவதற்கு நம்மை பழக்கப் படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், ஊரார்கள் அனைவரையும் பழக்கப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் கனிவான பார்வை நம் பக்கம் திரும்புவதற்கு தினசரி திருக்குர்ஆனை ஓதுவதற்கு நாம் பழக்கமாக்கிக் கொண்டால் நமது உள்ளம் நிம்மதிபெறும், அமைதியடையும். ஆம்! திருக்குர்ஆனும் அதைத்தான் கூறுகிறது, ''அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உள்ளங்கள் அமைதி பெரும்''.

இன்ஷா அல்லாஹ், மேலும் சிந்திப்போம்...
Thanks :
- எம்.ஏ.முஹம்மது அலீ

0 comments: